ரூ.2.50 லட்சத்தை ரயிலில் வைத்துவிட்டு ரயில்நிலையத்தில் சாப்பிட இறங்கிய பயணி! ரயில் கிளம்பியதால் தவித்த பயணி!

ரூ.2.50 லட்சத்தை ரயிலில் வைத்துவிட்டு ரயில்நிலையத்தில் சாப்பிட இறங்கிய பயணி! ரயில் கிளம்பியதால் தவித்த பயணி!


train passenger missed money in train


கடலூரைச் சேர்ந்த பயணி திருச்சியில் ரயிலில் பயணம் செய்த போது தவறவிட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் பணத்தை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டம், ஆபத்தாரணபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தயானந்தன். இவர் ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர் மங்களூர் செல்வதற்காக சனிக்கிழமை பிற்பகலில் விருத்தாசலத்தில் இருந்து புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயிலில் எறியுள்ளார். அப்போது, கைப்பையில் ரூ.2.50 லட்சம் பணம் எடுத்து சென்றுள்ளார்.

train

அந்த ரயில் இரவு 8 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயிலில் இருந்து கீழே இறங்கி அவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் வருவதற்குள் ரயில் புறப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். உடனே அருகில் இருந்த ரயில்வே உதவி மையத்திற்கு சென்று, ரயிலில் தான் பணத்தைத் தவறவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து கரூர் ரயில் நிலைய ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தயானந்தன் பயணித்த பெட்டிக்கு சென்ற ரயில்வே போலீசார் அங்கிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர். இதைத்தொடர்ந்து, பேருந்தில் கரூர் வந்து சேர்ந்த தயானந்தனிடம் விசாரணை செய்த பிறகு பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.