#Breaking: இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



TN CM MK Stalin On Vellore Running Train Rape Attempt 

 

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன்பேட்டை பகுதியில், இரயில் பெட்டியில் இருந்து தள்ளிவிட்டு பலத்த காயமடைந்த கர்பிணிப் பெண்ணின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பெண் படுகாயம்

இதுதொடர்பாக அரசின் செய்திக்குறிப்பில், "திருப்பூர்‌ மாவட்டத்தில்‌, வசித்துவரும்‌ நான்கு மாத கர்ப்பிணிப்‌ பெண்‌ தனது சொந்த ஊருக்குச்‌ செல்வதற்காக கடந்த 06.02.2025 அன்று பிற்பகல்‌ கோயம்புத்தூர்‌ - திருப்பதி விரைவு இயிலில்‌ பெண்களுக்கான பெட்டியில்‌ பயணித்தபோது, ஜோலார்பேட்டை இரயில்‌ நிலையத்தில்‌ அப்பெட்டியில்‌ ஏறிய கே.வி.குப்பம்‌, பூஞ்சோலை கிராமம்‌, சின்ன நாகல்‌ பகுதியைச்‌ சேர்ந்த ஹேமராஜ்‌ என்பவன்‌ அப்பெண்ணிற்கு பாலியல்‌ தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத்‌ தாக்கி, வேலூர் மாவட்டம்‌, கே.வி.குப்பம்‌, சீதாராமன்‌ பேட்டை அருகில்‌ ஓடும்‌ இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில்‌ அந்தப்‌ பெண்‌ பலத்த காயம்‌ அடைந்துள்ளார்‌. 

இதையும் படிங்க: #Breaking: என் மனசெல்லாம் பதறுது., முதல்வரே உறுத்தலையா? பயமே இல்லையா? - அண்ணாமலை கடும் கண்டனம்.!

MK Stalin

மருத்துவ செலவை அரசு ஏற்கிறது

அதன்‌ தொடர்ச்சியாக மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ அந்தப்‌ பெண்ணிற்கு நேற்று (8.2.2025) கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக்‌ கேட்டு மிகவும்‌ அதிர்ச்சியும்‌ வேதனையும்‌ அடைந்தேன்‌. மேலும்‌, இச்சம்பவத்தில்‌ காயமடைந்து வேலூர்‌ அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு மேல்‌ சிகிச்சைக்காக இராணிப்பேட்டை தனியார்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும்‌ அப்பெண்ணிற்கு உயர்‌ சிகிச்சை அளிக்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌. தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ அப்பெண்ணின்‌ முழு மருத்துவச்‌ செலவையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்கும்‌. 

ரூ.3 இலட்சம் வழங்க உத்தரவு

இந்தக்‌ குற்றச்‌ சம்பவத்தில்‌ ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ்‌ உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில்‌ அடைக்கப்பட்டுள்ளான்‌. மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ அப்பெண்ணின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவரது உறவினர்களுக்கும்‌ எனது ஆறுதலைத்‌ தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு மூன்று இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: பணிந்தது மத்திய அரசு., ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.!