மிரட்டும் கனமழை; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்..!

மிரட்டும் கனமழை; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்..!



Threatening heavy rains red alert for 4 districts

இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே தென்மேற்கு பருவமழை  தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 24 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில்  மிககனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுளதை தொடர்ந்து, தமிழக அரசு, அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர் தொடர்புடைய மாவட்டங்களுக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் குறித்த புகார்களை, 1077, 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ்-அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.