ஏசி மெஷினில் குட்டி போட்டு குடும்பம் நடத்திய விஷ பாம்பு... பாம்பா, பல்லியா சந்தேகத்தில் பார்த்த சிறுவன்..!



the-poisonous-snake-that-hatched-in-the-ac-machine-and

சிவகங்கை அருகே ஏ.சி. மிஷினில் குடும்பம் நடத்திய பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரில் வசித்து வருபவர் அபுபக்கர் சித்திக். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இருக்கும் ஏ.சி. மிஷினில் இருந்து மூன்று பல்லிகள் எட்டி பார்ப்பதாக அவரது மகன் சுலைமான் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை அணைத்து விட்டு ஏ.சி. மெக்கானிக்கை வரவழைத்துள்ளார். 

மெக்கானிக் வந்து, ஏ.சி. மிஷினை கழற்றி பார்த்துள்ளார். அப்போது அந்த ஏ.சி. மிஷினுக்குள் நிறைய பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு வந்து  ஏ.சி. மிஷினுக்குள் இருந்த பாம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக பிடித்தனர். 

மொத்தம் ஐந்து விஷ பாம்புகள் அந்த மிஷினுக்குள் இருந்து பிடிபட்டன. அவை கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த விஷ பாம்புகள் என்று கூறப்படுகிறது. இந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் ஒரு சாக்குப்பையில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்புகள் மண்மலை காட்டில் விடப்பட்டன.