தாயின் கண் முன்னே நடந்த விபரீதம்: பத்து நொடியில் பறந்த புது மாப்பிள்ளையின் உயிர்..!

தாயின் கண் முன்னே நடந்த விபரீதம்: பத்து நொடியில் பறந்த புது மாப்பிள்ளையின் உயிர்..!



The life of the new bridegroom that flew away in ten seconds

கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(55). இவர் பண்ருட்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இந்த தம்பதியினருக்கு ராஜ்குமார் (32), ராஜ்கமல் (30) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சாப்ட்வேர் என்ஜினீயரான ராஜ்குமாருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியான ராஜ்கமலும் பெங்களூருவில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

ராஜ்கமலுக்கும், வேப்பூரை சேர்ந்த என்ஜினீயர் குணசுந்தரிக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் விஜயலட்சுமியும், குணசுந்தரியும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பேருந்து நிலையம் சென்ற ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

பின்னர் தனது தாய் விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக ராஜ்கமல் மீண்டும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சென்னை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே விஜயலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார். உடனே ராஜ்கமல், மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது சவ ஊர்வலத்தின் போது ரோட்டில் வீசப்பட்டு மழையில் நனைந்து கிடந்த மலர் மாலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதால் கவிழ்ந்தது.

எதிர்பாராத இந்த விபத்தில் நிலைதடுமாறி விழுந்த ராஜ்கமலின் தலை, பாலத்தின் சுவரில் மோதியது. இதன் காரணமாக மண்டை உடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டு அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த விபத்து தொடர்பாக பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.