தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 150க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம்.!
தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 150க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம்.!
சென்னை டிபிஐ வளாகத்தில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையின் தலைமை அலுவலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஒருநபர் குழு அளிக்கும் அறிக்கை வரை தங்களது போராட்டத்தை நிறுத்திவைக்குமாறு அரசு தரப்பில் அவர்களுடன் நடத்தப்பட்ட இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் இன்றும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வருபவர்களில் 80 பெண்கள் உட்பட 140 பேர்
மயக்கம் அடைந்துள்ளனர். நேற்றைய போராட்டத்தின்போது 29 பெண்கள் உட்பட 53 ஆசிரியர்கள் மருத்துவமனையில் மயக்கமடைந்து சிகிச்சை பெற்றனர். இதுவரை 150 க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து வருகிற 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 3 ஆம் பருவ பள்ளி சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் வேலையில் தலைமை அலுவலகம் தீவிரமாக உள்ள நிலையில் இவர்களது போராட்டத்தால் அந்த பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.