பாரபட்சமின்றி இனி தூக்குங்க! யாரும் தப்ப கூடாது... தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் போட்ட அதிரடி உத்தரவு!!!
அரசுத் துறைகளில் லஞ்சப் புகார்களை கையாளும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமல்லாமல், உயர் அதிகாரிகள் மீது வரும் புகார்களையும் மறைக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லஞ்சப் புகார்களை மறைக்கக் கூடாது
அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மீது லஞ்சம் தொடர்பாக புகார்கள் வந்தால் அவற்றை அலட்சியப்படுத்தவோ, மறைக்கவோ கூடாது. தகவலின்படி, அந்தப் புகார்கள் உடனடியாக லஞ்ச ஒழிப்பு மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் அனுப்பி முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மீதான புகார்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமின்றி நடவடிக்கை
அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் முதல் உயர்பதவியில் உள்ள அதிகாரி வரை யார் மீதும் லஞ்சப் புகாரில் உண்மைத்தன்மை இருப்பது உறுதியானால், பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து துறைத் தலைவர்களும் புகார்களை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புகார்களை மறைத்தாலும் நடவடிக்கை
லஞ்சப் புகார்களை மறைக்கும் அல்லது விசாரணைக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதனால் அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நேர்மையான நிர்வாகம் மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.