கொரோனா நேரத்தில் முயல் வேட்டை ஆடிய 4 நபர்கள்! வனத்துறையினர் அதிரடி!

கொரோனா நேரத்தில் முயல் வேட்டை ஆடிய 4 நபர்கள்! வனத்துறையினர் அதிரடி!



rabbit-hund-in-corona-times

உடுமலை அருகே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் முயல் வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுள் மயில், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவை வறட்சி காலத்தில் வனப்பகுதியில் இருந்து சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் அவைகளை வேட்டையாடி உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகாவை சேர்ந்த பெதப்பம்பட்டி பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக உடுமலை வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் பெதப்பம்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hund

வனத்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், அங்குள்ள வயல்வெளியில் 4 பேர் வலை விரித்து காட்டுமுயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த வனத்துறையினர் அவர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் அடிவெள்ளியை சேர்ந்த மாரப்பன்( 31), முத்துச்சாமி(30), ராஜூ (33), ஓனாக்கல்லூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(36) ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் முயல்களை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 4 பேருக்கும் சேர்த்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.