இறந்த தந்தைக்கு பால் ஊற்றிக்கொண்டே சாமி வந்தாடிய மகன்.. படாரென எழுந்த தந்தை.. பதறிப்போன உறவினர்கள்..!

இறந்த தந்தைக்கு பால் ஊற்றிக்கொண்டே சாமி வந்தாடிய மகன்.. படாரென எழுந்த தந்தை.. பதறிப்போன உறவினர்கள்..!



Pudukkottai Aged Man Not Died But Relations Arranged Funeral Service

 

திரைப்படங்களில் நடக்கும் அதிசிய நிகழ்வை போல, இறந்த பின்னர் வயோதிகர் திடீரென எழுந்து வந்ததால் இறுதிச்சடங்கு செய்ய வந்த உறவினர்கள் ஒருகணம் ஆடிப்போயினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 60). இவர் விவசாயி ஆவார். நுரையீரல் & இதயம் பாதிக்கப்பட்ட சண்முகம், கடந்த 19 நாட்களாக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம், திடீரென இன்று காலை ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். மயக்க நிலையில் இருந்தவரை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். சண்முகம் ஊர் எல்லைப்பகுதியில் வரும்போதே, அவர் உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு செய்தி பரவியுள்ளது. 

அதனால் பலரும் ஒன்று கூடிவிட, ஆலம்பட்டி - முரண்டாம்பட்டி விலக்கு பகுதியில் வைத்து முதற்கட்ட சடங்குகள் செய்யப்பட்டு உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது  வீட்டு திண்ணையில் சண்முகத்தின் உடல் வைக்கப்பட, ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து இருந்த அவரின் மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றியுள்ளார். 

பின்னர், தந்தைக்கு பால் ஊற்றியபோது திடீரென அருள் வந்து, "அவர் இறக்கவில்லை. உயிருடன் எழுவார்" என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட உறவினர்கள் சண்முகத்தின் மகன் தந்தையின் மீதுள்ள பாசத்தால் ஆதங்கத்தில் பேசுகிறார் என எண்ணியுள்ளனர். 

இதற்கிடையில் சண்முகத்தின் கை-கால்கள் அசைய தொடங்கி எழுந்துவிட்டார். இதனால் பதறிப்போன உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். அவரது உடல் நலனும் முன்னேறியுள்ளது. அவர் இறந்துவிட்டதாக அனைவர்க்கும் செய்தி கிடைத்ததால் துக்கம் விசாரிக்க வந்த பலரும் உண்மை அறிந்து நலம் விசாரித்து சென்றனர்.