உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ டிரைவரை காத்த போலீசார்: நம்புங்க சார் போலீஸ் உங்கள் நண்பன்..!

உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ டிரைவரை காத்த போலீசார்: நம்புங்க சார் போலீஸ் உங்கள் நண்பன்..!



praise-is-pouring-in-for-the-adyar-traffic-police-who-r

நெஞ்சு வலியால் துடித்த ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய அடையார் போக்குவரத்து காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( 53). இவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூர் வரை பயணியை கொண்டு வந்து அவரது வீட்டில் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சமாளித்து விடலாம் என்று நினைத்து,  திருவான்மியூரில் இருந்து ஆட்டோவை ஓட்டிக்கொண்டு புறப்பட்டுள்ளார். இதற்கிடையே அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலியால் துடித்த அவர் வழியில் அடையாறு போக்குவரத்து காவல் நிலைத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் தனது நிலையை கூறி உதவி கேட்டுவிட்டு படுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ,சுரேஷ்குமாரின் நிலைமையை கண்டு சுதாரித்த காவல்துறையினர், சமயோசிதமாக செயல்பட்டு அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சை நிறுத்தி சுரேஷ் குமாரை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் சுரேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சரியான நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர்  செய்த உதவியின் காரணமாகவே ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமார் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிருக்கு போராடி நிலையில், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவரை சமயோசிதமாக காப்பாற்றிய அடையாறு போக்குவரத்து காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.