தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த மக்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்..!

தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த மக்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்..!



People encroaching on privately owned land

கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு பட்டாவுடன்  இடத்தை வழங்கினர். இதற்கிடையே, வழங்கப்பட்டது போக  மீதமுள்ள இடத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது‌.

இந்த நிலையில், அந்த இடத்தை அரசுக்கு விற்பனை செய்த உரிமையாளருக்கு திருப்பி வழங்காமல் இருந்ததுடன், அந்த இடத்தில்  18 குடும்பத்தினர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி உரிமையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக இடத்தை ஆக்கிரமித்திருந்த மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 18 வீடுகளை இடிப்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் தாசில்தார் பூபாலச்சந்திரன், ஆதி திராவிட துறை தாசில்தார் ஸ்ரீதரன், மண்டல துணை தாசில்தார் அசோகன் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்து விடுகிறோம் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே  அங்கிருந்த 18 குடும்பங்களில் 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டாவுடன் இடம் இருந்து வந்ததால் மீதமுள்ள 13 குடும்பங்களுக்கு சம்பவ இடத்திலேயே பட்டா வழங்குவதற்கு வருவாய் துறையினர் ஏற்பாடு செய்ததுடன் உடனடியாக பட்டாவும் வழங்கினர்.

இதனை தொடர்ந்து வீடுகளை இடிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினால் பொருட்களை ஏற்றிக் கொண்டு இடத்தை காலி செய்து விடுவதாக மீண்டும் பொதுமக்கள் அதிகாரியிடம் உறுதியளித்தனர். அதன் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி அங்கிருந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.