பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து ஒரு வயது குழந்தையை கொலை செய்த கொடூர பாட்டி.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!
பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து ஒரு வயது குழந்தையை கொலை செய்த கொடூர பாட்டி.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!
பச்சிளம் குழந்தையின் வாயில் பிஸ்கட்டை கவரை திணித்து கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர்கள் நித்யானந்தம்-நந்தினி தம்பதி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது ஒரு வயது மகனுடன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனது தாய் நாகலட்சுமி வீட்டில் தங்கி வசித்துவந்துள்ளார்.
இந்தநிலையில் நந்தினி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றுவந்துள்ளார். தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்புவார். நந்தினி பணிக்கு சென்று வீடு திரும்பும் வரை அவரது குழந்தையை நந்தினியின் தாயார் நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நந்தினி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது மகன் பேச்சு மூச்சு இல்லாமல் தொட்டிலில் தூங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் குழந்தையின் உடம்பில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையின் தாயிடமும், பாட்டி நாகலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குழந்தையின் பட்டி நாகலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், நாகலட்சுமி குழந்தையை தாக்கியதை ஒப்புக்கொண்டார். பேரனின் குறும்புத்தனத்தை தாங்க முடியாததால் கோபமடைந்த நாகலட்சுமி வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதும், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நாகலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.