கடல் கடந்த காதல்..! ஸ்வீடன் நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்த நாமக்கல் இளைஞர்..!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து சுயமரியாதை திருமணம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர், ஸ்வீடன் நாட்டில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர், தனது ஓய்வு நேரங்களில் டாக்ஹோம் என்னும் பகுதிக்கு கூடைப்பந்து விளையாட சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த மரினா சூசேன் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் தரணியின் சொந்த ஊரில் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து மத வழக்கப்படியும் திருமணம் செய்து கொண்டனர். தரணி குடும்பத்தினரின் உபசரிப்பும், தமிழக கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை கண்டு மிகவும் பெருமிதம் அடைவதாக மணமகளும் அவரது சகோதரரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.