ஒரே பேருந்தில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம்.. நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர்.. தகராறு.!

ஒரே பேருந்தில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம்.. நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர்.. தகராறு.!


Kallakurichi Chinnasalem Govt Bus Passengers Issue

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வழித்தடத்தில் அரசு பேருந்து இயங்கி வருகிறது. இன்று காலை அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். பேருந்தில் போதிய இடம் இல்லாததால், பலரும் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். 

பேருந்து இந்திலி கிராமத்தில் வருகையில், அங்கு 20 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உட்பட பயணிகள் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், பேருந்தில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால், ஓட்டுநர் செய்வதறியாது திகைத்துள்ளார். 

இதனையடுத்து, பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிவந்து ஓட்டுநர் இதற்கு மேல் பயணிகள் ஏறினால் பேருந்து விபத்திற்குள்ளாகும் என்று தெரிவிக்கவே, நடத்துனரும் பயணிகளிடம் தகவலை தெரிவித்துள்ளார். பயணிகளும் அவரவர் வேலைக்கு செல்லவேண்டி இருந்ததால் வாக்குவாதம் செய்துள்ளனர்.

மேலும், போக்குவரத்து கழகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்ததாகவும் கூறவே, தகவல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகளிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். மேலும், இந்த பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.