மதுவால் வந்த விபரீதம்.. தீக்குளித்த கணவன் மனைவி.. நிற்கதியான குழந்தைகள்..!



disaster-caused-by-alcohol-husband-and-wife-set-on-fire

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தோப்புக்குல்லை பகுதியில் வசித்து வருபவர்கள் அருள் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருள் குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் நொந்து போன மனைவி முத்துலட்சுமி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்யும் தனது கணவரை திருத்துவதற்காக  ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டுள்ளார். அதற்கு ஜோசியர் பரிகாரமாக குடும்பத்தினரோடு ஊரில் உள்ள வீரன் கோயிலில் தினமும் இரவில் படுத்து உறங்குமாறு கூறவே அவர்களும் அவ்வாறு செய்து வந்துள்ளனர்.

Alcohol addiction dispute

இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி குழந்தைகளோடு கோயிலுக்கு சென்று உறங்கி விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது கணவர் மது போதையில் படுத்திருப்பதை கண்டு ஆத்திரமடைந்த முத்துலட்சுமி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் அங்கு வந்த அருளின் தாயார் தமிழேந்தி தம்பதியினரை சமாதானப்படுத்தி விட்டு குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இருப்பினும் அருளின்தாய் சென்ற பிறகு மீண்டும் தம்பதியினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்துலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக் கொண்டார். இதனைப் பார்த்த கணவர் அருளும் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார்.  இதனையடுத்து முத்துலட்சுமி தீக்குச்சியை பற்ற வைத்தவுடன் இருவர் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் இருவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Alcohol addiction dispute

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணவன் அருள் மற்றும் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாயினர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.