டூரிஸ்ட் பிளேஸில் காஸ்ட்லீ பைக் டார்கெட்.. ஊரு விட்டு ஊரு வந்து திருட்டு கும்பல் அட்டகாசம்.. 3 பேர் கைது..!

டூரிஸ்ட் பிளேஸில் காஸ்ட்லீ பைக் டார்கெட்.. ஊரு விட்டு ஊரு வந்து திருட்டு கும்பல் அட்டகாசம்.. 3 பேர் கைது..!



dindigul-kodaikanal-bike-theft-gang-police-arrested

சுற்றுலாத்தலங்களுக்கு வரும் மக்களின் விலையுயர்ந்த பைக்கை குறிவைத்து திருட்டு செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கும்பல் காவல் துறையினரால் கொடைக்கானலில் கைது செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு, கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். 

இந்நிலையில், மறுநாள் காலையில் வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கண்காணித்தனர். 

சம்பவத்தன்று, அதிகாரிகள் ஆனந்தகிரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரிடம் விசாரணை நடந்தது. அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறவே, மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

Dindigul

அப்போது, கேரள சுற்றுலா பயணியின் இருசக்கர வாகனத்தை திருடியது இவர்கள்தான் என்பது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரை சேர்ந்த ஹாரிஸ்ராஜ் (வயது 21), பெரியகுளம் ஆரிஸ் முகம்மது (வயது 19), அசாருதீன் (வயது 18) என்பது உறுதியானது. 

இவர்கள் மூவருமே சுற்றுலா பயணிகளை போல கொடைக்கானலுக்கு வருகை தந்து, முக்கிய இடங்களில் நோட்டமிட்டு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி விற்பனையில் ஈடுபட்டதும் உறுதியாகவே, மூவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.