சென்னையில் அடங்க மறுக்கும் கொரோனா! தமிழகத்தில் 3-ல் 2 மடங்கு நோயாளிகள் சென்னையில் உள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்துவரும் நிலையில் நேற்று மட்டும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 624 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 3-ல் 2 மடங்கு பேர் சென்னையில் உள்ளனர். அதாவது சென்னையில் 9,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7,491 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். 7,915 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பல இடங்களில் நடமாட தொடங்கிவிட்டனர். இதனால் கொரோனா பரவலும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்களின் நலனுக்காகவே ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.