மாமியாரின் வீட்டிற்கு சென்று காதல் மனைவியை கதறவைத்த கணவன்; நடுநடுங்கிப்போன அக்கம் பக்கம்.!

காதல் திருமணம் செய்த கணவன் மனைவியை கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, பி.நாகூரில் வசித்து வருபவர் பார்த்தசாரதி (வயது 29). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சங்கீதா (வயது 25). தம்பதிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
பார்த்தசாரதிக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் வீட்டிற்கு போதையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சங்கீதா எம்.ஜி. புதூரில் இருக்கும் தாயின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியை சமாதானம் செய்ய பார்த்தசாரதி மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை தகாத வார்த்தையால் திட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சங்கீதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.