தனியார் மில்லில் பயங்கரம்: வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி கொடூர கொலை ..!



Brutal murder of Bihar state worker by his room mate

பீகார் மாநிலம், கிழக்கு செம்பரம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நானாக் ஷா (32). இவர் கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகேயுள்ள கீழ்மணக்குடி பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான தும்பு மில்லில் பணிபுரிந்து வந்தார். அவருடன் மற்றொரு வடமாநில தொழிலாளியான ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அவர்கள் இருவரும் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேமடைந்த மில் ஊழியர்கள், அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். அறையினுள் யாரும் பதிலளிக்காததால், அறையின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, நானாக் ஷா தலையில் சிமெண்ட் கல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

மேலும், அவருடன் தங்கியிருந்த ரமேஷ் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.  இந்த சம்பவம் குறித்து தென்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு மில் நிர்வாகம் தகவல் அளித்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கொலையான நானாக் ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தென் தாமரைக்குளம் காவல்துறையினர், தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர். வடமாநில தொழிலாளி ஒருவர் அவரது ஊரை சேர்ந்தவராலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.