எலும்புக்கூடாக கிடந்த தாய்! ஓராண்டாக யாரும் பார்க்க வரவில்லை! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய தனிமை... இறுதியில் மகள், மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், வீட்டுக்குள் 52 வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டே பகுதியைச் சேர்ந்த தாட்சாயிணி என்பவர் சுமார் ஓராண்டுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நீண்ட நாட்களாக யாரும் வீட்டிற்கு வந்து பார்க்காததால், அவரது மரணம் வெளியுலகுக்கு தெரியாமல் போயுள்ளது.
வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு
பகலகுண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் தாட்சாயிணி வசித்து வந்தார். ஒரு மாடி வீட்டில் தனியாக இருந்த அவரை நீண்ட காலமாக உறவினர்கள் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு தாட்சாயிணியின் எலும்புக்கூடு கிடந்தது தெரியவந்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளால் தனிமை
தாட்சாயிணியின் கணவர் உமேஷ் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது மகனும் புற்றுநோய் பாதிப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகளால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனும் கடந்த ஓராண்டாக வீட்டிற்கு வந்து அவரை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை
நீண்ட நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில், தாட்சாயிணி இறந்தது குறித்த தகவல் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உடல் எலும்புக்கூடாக மாறியுள்ளதால், அவர் எப்போது உயிரிழந்தார் என்பதையும், மரணத்திற்கான காரணத்தையும் உறுதி செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: பழனி கோயில் நில வழக்கு வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே திடீர் மரணம்! சார் பதிவாளர் ICU-வில் அனுமதி... அடுத்தடுத்து பரபரப்பு!!!