காலியாகும் அமமுக கூடாரம்.. அடுத்தடுத்து விலகல்.. ஷாக்கில் டிடிவி தினகரன்.!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, திமுக கட்சிகள் பல்வேறு அரசியல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
அதிமுக-அமமுக சர்ச்சை:
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து உருவான அமமுக, தேர்தலுக்கான களத்தில் மீண்டும் இணைந்தபோதே பல்வேறு சர்ச்சை எழுந்து இருந்தது. மேலும், பலரும் அன்றைய ஆளும் கட்சியான திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ள தொடங்கி இருந்தனர். 2026 தேர்தலில் வெற்றியடைந்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!
அடுத்தடுத்த அரசியல் சூறாவளிகள்:
ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் உடைந்துபோன அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. பல முக்கிய தலைவர்கள் இன்று வெவ்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். திமுகவுடன் ஒருபோதும் கொள்கை ஒத்துப்போகாத ஓ. பன்னீர் செல்வம், தேர்தலுக்கு முன்பு திமுகவில் தன்னை ஐக்கியம் ஆக்கிக்கொண்டார். கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியாக கவனிக்கப்பட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசில் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.

அமமுகவில் அடுத்த சூறாவளி:
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்ளாமல், அதிமுகவில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் அமமுகவை வழிநடத்தி வந்தார். 2026 தேர்தலுக்காக அண்ணன்-தம்பி சண்டை என வாதிட்டு கூட்டணி அமைத்தார். இதனிடையே, 11 தொகுதியில் போட்டியிட்டு, நடந்த தேர்தலில் தோல்வியே மிஞ்சியது. ஒரத்தநாடு தொகுதி மட்டுமே அமமுக வசம் இருந்தாலும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ., காமராஜும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. காமராஜ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு இருந்தார்.

நீக்கமும், விலகலும்..
இந்நிலையில், டிடிவி தினகரன் செயல்பாடுகள் பிடிக்காமல் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் நாதன், திருவாரூர் முத்துப்பேட்டை செயலாளர் நாசர் என பலரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக எதிர்த்துவிட்டு, தற்போது துரோகத்தின் வழியில் டிடிவி நடந்து வருகிறார். இது எங்களுக்கு பிடிக்கவில்லை என பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதேபோல ராமநாதபுரம் உட்பட பல மாவட்ட நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதால், அமமுக கூடாரம் காலியாவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?