திருடிய பணத்தை பிரிப்பதில் தகராறு: உற்ற நண்பனை போட்டுத்தள்ளிய இளைஞர்..!

திருடிய பணத்தை பிரிப்பதில் தகராறு: உற்ற நண்பனை போட்டுத்தள்ளிய இளைஞர்..!



A young man who had a dispute with his friend over the division of the stolen money

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் ஆர்.ஆகாஷ் (22). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பி.ஆகாஷ் (24). இந்த இரண்டு ஆகாஷ்களும் நண்பர்கள். இவர்கள் இருவரும் என்.எல்.சி நிறுவன சுரங்கத்தில் இருந்து இரும்பு பொருட்களை திருடி, அதனை பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வழக்கம்போல் நேற்று காலையிலும் இருவரும் என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கத்திற்கு சென்று இரும்பு பொருட்களை திருடி வந்தனர். பின்னர் அதனை விற்று பணம் பெற்றனர். இந்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பணத்தில் மது வாங்கி இருவரும் குடித்தனர்.

இதன் பின்னர் போதை தலைக்கு ஏறியதும் பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கு இடைடே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக சமாதானமான இருவரும் நண்பகல் 12. 30 மணி அளவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிரகாஷ் மகன் ஆகாஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ் மகன் ஆகாஷை சரமாரியாக குத்தினார்.

இதில் ராஜ் மகன் ஆகாஷின் மார்பில் குத்து விழுந்தது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அவர், நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சம்பவம் குறித்து ஊ. மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்.ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பி. ஆகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது