காதலை நிருபிக்க மார்பில் பச்சை குத்த சொன்ன காதலன்: காப்பு மாட்டி கம்பி எண்ண வைத்த காதலி..!

காதலை நிருபிக்க மார்பில் பச்சை குத்த சொன்ன காதலன்: காப்பு மாட்டி கம்பி எண்ண வைத்த காதலி..!



A lover asked to get a tattoo on his chest to prove his love

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர் (28).  இவர் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இதனால் மார்த்தாண்டம் பகுதியை சுற்றியுள்ள பல இடங்களுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இளைஞருக்கு தனது காதலியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. தன்னை உண்மையாக காதலிக்கிறாளா? அல்லது டைம் பாஸ் செய்ய காதலிப்பதாக கூறி நடிக்கிறாளா? என்ற சந்தேகம் வந்துள்ளது. ஒரு வேளை டைம் பாஸூக்காக பழகினாள் தன் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு போய்விடக்கூடும் என்று நினைத்துள்ளார்.

இதற்கிடையே, நீ என்னை, உண்மையாகத்தான் காதலிக்கிறாயா ? என அடிக்கடி கேள்வி கேட்டு தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இதனை விளையாட்டாக நினைத்த மாணவிக்கு ஒரு கட்டத்தில் இளைஞர் மீது வெறுப்பை வரவழைத்துள்ளது. நச்சரிப்புகளுக்கு மத்தியில் காதலிப்பதை விட இளைஞரை விட்டு விலகி விடலாம் என்று தோன்றும் அளவிற்கு அவரது தொல்லை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், என்னுடைய பெயரை உன்னுடைய மார்பில் பச்சை குத்திக்கொள், அப்போதுதான் உன் காதல் உண்மை என்று நம்புவேன் என்று இளைஞர் வற்புறுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இளைஞரின் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.