தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: கடத்தல் கும்பலோடு சிக்கிய போலீஸ்..!

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: கடத்தல் கும்பலோடு சிக்கிய போலீஸ்..!



A dramatic twist in the businessman's abduction case, the police caught up with the kidnapping gang

சென்னை தி.நகர் ராமசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (46). இவர் ஒரு தொழிலதிபர். இவர் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42) என்பவருடன் கூட்டு சேர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் சவுடு மணல் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக, தனது பார்ட்னரான தொழில் அதிபர் ஆரோக்கியராஜிடம் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார்.

அந்த கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாமல் அவரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆரோக்கியராஜ் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் ஆரோக்கியராஜ் 5 பேர் கொண்ட கும்பலுடன் சரவணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சென்று, துப்பாக்கி முனையில் சரவணைனை கடத்தியுள்ளார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 சொகுசு கார்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

சரவணனை காரில் கடத்தியபோது அவரது அண்ணன் முத்துகுமரன் (51) தடுக்க முயன்றார். அவரை கீழே தள்ளிய கடத்தல் கும்பல், மின்னல் வேகத்தில் அங்கிருந்து  தப்பியது. கடத்தல் சம்பவம் குறித்து முத்துகுமரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

சரவணனை கடத்தி சென்ற கார் மற்றும் அவரது வீட்டில் கடத்திச் செல்லப்பட்ட கார்களின் பதிவு எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டது. இந்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அந்த பகுதி காவல்துறையினரின் அதிரடி வாகன சோதனையில் கடத்திச் செல்லப்பட்ட 2 சொகுசு கார்களும் பிடிபட்டன. ஆனால் காரில் இருந்தவர்கள் தப்பி சென்றனர்.

இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலையில் சரவணனை கடத்தி சென்ற காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காரில் இருந்து சரவணனை பத்திரமாக மீட்டதுடன், அவரை கடத்தி சென்ற ஆரோக்கியராஜ், கார் டிரைவர் அரவிந்த்குரு (23), அப்ரோஸ் (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இத்ற்கிடையே சொகுசு காரை விட்டு தப்பி சென்ற 3 பேரும் காவல்துறையினரிடம்  சிக்கினர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கோவை காந்திபுரம் குடியிருப்பை சேர்ந்த சிறைக்காவலர் நாகேந்திரன் (31), மதுரை மீனாம்பாள்புரம் பண்டிட் நேருஜி தெருவை சேர்ந்த அஜய் (24) மற்றும்  மதுரை கே.புதூர் சூர்யாநகர் 3 வது தெருவை சேர்ந்த விஜயபாண்டி (25) என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களில் அப்ரோஸ், அஜய் ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.