கண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்!

கண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்!



3 boys fell down in pool and dead near Cudaloor

கடலூர் அருகே சகோதரிகள் இருவரின் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த திருப்பெயர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு விவேகன் என்ற மகன் இருந்துள்ளார். அதேபோல் மல்லிகாவின் சகோதரி மணிமேகலை இலங்கியனுர் என்னும் பகுதியில் வசித்துவந்துள்ளார்.

இவருக்கு இரட்டையர்களான விக்னேஷ் - சர்வேஷ் என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சில நாள்களுக்கு முன், தங்கை மல்லிகாவை பார்க்க மணிமேகலை தனது இரண்டு மகன்களுடன் வந்துள்ளார். வந்த இடத்தில் மல்லிகா மற்றும் மணிமேகலையின் மகன்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே மூன்று சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருந்தநிலையில் சிறிதுநேரம் கழித்து மூவரையும் காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் என பலரும் சிறுவர்களை பல இடங்களில் தேடியும், அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசாரும் கிராமத்திற்கு வந்து சிறுவர்களை தேடியுள்ளனர். ஆனால் சிறுவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனிடையே சிறுவர்கள் வீட்டின் அருகிலுள்ள சின்னேரி குளத்தின் கரையில் நடந்துசென்ற கால்தடம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு நேரத்திலையே குளத்திற்குள் இறங்கி சிறுவர்களை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷ் ,சர்வேஷ் ஆகிய இருவரின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.

நீண்ட நேரம் தேடியும் விவேகனின் உடல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று காலை 7 மணியளவில் பேரிடர் மீட்பு குழுவினர் குளத்தில் இறங்கி படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது விவேகனின் உடலும் குளத்தில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூன்று சிறுவர்களின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க வைத்தது.