நெருங்கி வரும் மாண்டஸ் புயல்: தமிழக துறைமுகங்களில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு..!
நெருங்கி வரும் மாண்டஸ் புயல்: தமிழக துறைமுகங்களில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு..!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடலூர், நாகை, தூத்துக்குடி மற்றும் பாம்பன் ஆகிய துறைமுகங்களில் இன்று 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.