குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் 200 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பு!!
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அதனை ஆதாரமாக தருபவர்களுக்கு ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது. மேலும் தெருக்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால், வீடியோ அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
