மாசி மகம் 2026: விரத முறைகள், செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்னென்ன?



masi-magam-2026-viratham-murai-seiya-vendiyavai-thavirka-vendiyavai-tamil

Maasi Magam: மாசி மகம் 2026 திதி, நட்சத்திர நேரங்கள், விரத முறைகள், செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அபிஷேக வழிபாடு நல்லது:

மாசி மாதத்தில் மக நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் புனித நாள் ‘மாசி மகம்’ எனப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் மக நட்சத்திரம் மார்ச் 2 (திங்கள்) காலை 08:17 மணிக்கு தொடங்கி, மார்ச் 3 (செவ்வாய்) காலை 08:07 மணிக்கு நிறைவடைகிறது. பௌர்ணமி திதி மார்ச் 2 மாலை 06:29 மணிக்கு ஆரம்பித்து, மார்ச் 3 மாலை 05:52 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி இறைவனை வழிபடுவது சகல பாவங்களையும் நீக்கும். ஆதி கும்பகேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் சன்னதியில் உள்ள நவநதிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கும்.

இதையும் படிங்க: Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!

திருமணத்தடை நீங்கும்:

மாசி மகம் நாளில் பார்வதி தேவியை சிறப்பாக வழிபடுவது திருமணத் தடை நீங்கி, தம்பதியருக்கு ஒற்றுமை நிலைக்கும். தக்ஷன் மகளாகச் சங்கு வடிவில் அவதரித்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் மாலை 6:30 மணிக்குப் பிறகு அம்பிகைக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மல்லிகைப் பூக்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த மாதம் என்பதால், குழந்தை வரம் வேண்டுவோர் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை 6:30 மணிக்குப் பிறகு முருகன் கோவிலுக்குச் சென்று, தங்கள் வயதிற்கு ஏற்ற எண்ணிக்கையில் பிரதட்சிணம் செய்து ‘செப்பு வேல்’ வாங்கி பிரார்த்தனை செய்து உண்டியலில் செலுத்தலாம். உயர்கல்வி, PhD போன்ற ஆராய்ச்சி படிப்புகளை தொடங்குவோர் இந்த நாளில் முருகனை வழிபடுவது வெற்றியைத் தரும். நிலம், வீடு, நீதிமன்ற வழக்குகள் போன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் பெருமாள் கோவிலில் வராகமூர்த்தியை வழிபடலாம். மாணவர்கள் சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகம் செய்து வணங்கினால் கல்வி ஞானம் பெருகும்.

மாசி மகம்

புண்ணியம் தரும் செயல்கள்:

விரத முறைகளில், பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது. புனித நதிகளை மனதில் நினைத்து வீட்டிலேயே நீராடலாம். குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து முன்னோர்களின் பெயரைச் சொல்லி செடிகளுக்கு ஊற்றி பிரார்த்தனை செய்யலாம். மாலை வேளையில் பூஜை அறையிலும், வீட்டின் நிலைவாசல் படியிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது. பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள், பறவைகளுக்கு தானியங்கள் வழங்குதல் புண்ணியமாக கருதப்படுகிறது. வீட்டில் உள்ள முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது நல்லது.

தவிர்க்க வேண்டியவை:

இந்த நாளில் அசைவ உணவு சமைப்பதோ, சாப்பிடுவதோ வேண்டாம். வெங்காயம், பூண்டு இல்லாத உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். விரத நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை விட சாதாரண நீரில் குளிப்பது சிறந்தது. மது மற்றும் புகை போன்ற பழக்கங்கள் பித்ரு தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுவதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் உறங்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யலாம்.

இதையும் படிங்க: தோஷம் நீக்கும் திருவோண விரதம்.. ஆன்மீக பக்தர்களே இன்று தவறவிடாதீங்க.!