சனியின் தாக்கத்தை குறைக்க அனுமன் வழிபாடு.. புல்லரிக்கவைக்கும் புராண வரலாறு.!

நவகிரகங்களில் வலிமையானது சனி பகவான் தான். அவரை போல கொடுப்பவரும், கெடுப்பவரும் இல்லை என்று கூறுவார்கள். கடந்த பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது சனி பகவானின் வேலையாகும்.
இதை எதிர்கொள்ளும் காலகட்டம் தான் ஏழரை சனி மற்றும் சனி மகா தசை என்பவை. ஒருவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில், சனியின் அமைப்பு மோசமானதாக இருந்தால், மனிதன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார். இப்படி சனியின் தாக்கத்தில் இருக்கும் போது அவர் அனுமனை வணங்கினால் சனியினால் ஏற்படும் தொந்தரவுகள் தீரும் என்று கூறப்படுகிறது.
புராண காரணம் :
அனுமன் குழந்தையாக இருந்தபோது, சூரிய பகவானை பார்த்து அது ஒரு சுவையான பழம் என்று கருதினார். எனவே, அவரை பிடித்து சாப்பிட நினைத்துள்ளார். உடனே பயந்து போன சூர்ய பகவான் தேவர்களிடம் பாதுகாப்பு வேண்டி சென்றார். இந்திரன் அனுமனை தாக்கி, அதன் பின் சூரிய பகவான் பற்றிய உண்மையை எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: பாபா வாங்கா கணிப்பில் 2025ம் ஆண்டு வாழ்க்கையே மாறப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா?
இதனைத் தொடர்ந்து தன் தவறை உணர்ந்த அனுமன் சூரிய பகவானிடம் மாணவனாக தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டினார். சூரியனிடமிருந்து வித்தைகளை கற்றுக் கொண்ட அனுமன் குருதட்சணையாக சூரிய பகவானுக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சூரிய பகவான் தன் மகன் சனி பகவானின் கர்வத்தை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பராக்கிரமசாலியான அனுமன் சனி பகவானின் அக்கிரமங்களை தடுத்து தான் தான் பலசாலி என்று நினைத்திருந்த சனியின் கர்வத்தை ஒடுக்கினார். இதனைத் தொடர்ந்து, அனுமன் மீது பக்தி கொண்ட சனி பகவான், அவரது பக்தர்களை தொந்தரவு செய்வதில்லை என்று வாக்களித்தார்.
எனவே தான் சனி பகவானின் தாக்கத்தில் இருக்கும்போது அனுமனை வழிபட்டால் சனியின் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.