பெங்களூரின் வேகத்தில் மளமளவென சரிந்த சென்னை வீரர்கள்; ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்ற போராடும் தல தோனி!

பெங்களூரின் வேகத்தில் மளமளவென சரிந்த சென்னை வீரர்கள்; ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்ற போராடும் தல தோனி!



chennai-wickets-fall-one-by-one

2019 ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற நினைக்கும் அனைத்து அணிகளும் மிகவும் உத்வேகத்துடன் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய 39 ஆவது போட்டியில் 7 ஆட்டங்களில் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்ற ஆட்டத்தில் ஓய்வில் இருந்த சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த ஆட்டத்தில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.

IPL 2019

162 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலையே அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரு அணிக்கு கடைசியில் வந்த ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் கேட்ச் கொடுத்து வெளியேற அடுத்த பந்திலேயே ரெய்னா க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

IPL 2019

இதனைத் தொடர்ந்து உமேஷ் யாதவ் வீசிய நான்காவது ஓவரில் டுபிளேஸிஸ் 5 ரன்னிலும், ஆறாவது ஓவரில் கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் முதல் ஆறு ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

IPL 2019

இந்த பரிதாப நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தல தோனி முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து அவரோடு அம்பத்தி ராயுடு நிதானமாக ஆட சென்னை அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது. மீதமுள்ள 8 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து சென்னைக்கு தோனி வெற்றியை தேடித் தருவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.