தல தோனி மீது பாய்ந்த வழக்கு.! என்ன காரணம்.?



case filled on ms dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக உள்ளார். சில நிறுவனங்களின் விளம்பர படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துள்ளார். அந்தவகையில் பீஹாரில் உள்ள நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் தோனி நடித்துள்ளார்.

டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும்  மார்க்கெட்டிங் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.

இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதமிருந்த உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது பவுன்ஸ் ஆகியுள்ளது. இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
 
இதனைத்தொடர்ந்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 3 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.