திருவான்மியூர் வழிப்பறி; முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவியின் திட்டம் அம்பலம்
அருப்புக் கோட்டையை சேர்ந்த கதிரவன் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி, விளாத்திக்குளத்தை சேர்ந்த அனிதாவுக்கும் இடையே திருமணம் நடைப்பெற்றது.
திருமணமான இளம் ஜோடிகள் சனிக்கிழமை காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அனிதா அணிந்திருக்கும் நகைகளை தரும்படி மிரட்டினர்.
ஆனால் கதிரவன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கதிரவனை இரும்பு கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் கதிரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலை தடுக்க முயன்ற அனிதாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கதிரவன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மனைவி அனிதா நடந்த சம்பவத்தைப் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். குற்றவாளிகளைப் பிடிக்க சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஆண்டனி ஜெகன் என்ற இளைஞர் தான் வழிப்பறியில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கதிரவனின் மனைவி அனிதாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் காணப்பட்டது. இதனால் சந்தேகமடையாக போலீசார் அனிதாவிடம் துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்தனர். அவ்வாறு நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆண்டனி ஜெகன் அனிதாவின் முன்னாள் காதலன் என்ற தகவல் கிடைத்தது.
திருமணம் பிடிக்காததால், திருமணமான சில நாட்களில் வழிப்பறி திட்டத்தை தீட்டி கணவனை தீர்த்துக்கட்ட தன் முன்னாள் காதலன் ஆண்டனி ஜெகனுடன் அனிதா தீட்டிய திட்டம் அம்பலமானது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அனிதாவையும், ஆண்டனி ஜெகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.