அவசர செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு!!!

அவசர செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு!!!



stalin-speech

இரங்கல் தீர்மானத்தில் பேசிய செயற்தலைவர் மு.கா. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன் என தெரிவித்திருக்கிறார்.

stalin

இன்று சென்னையில் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய மு.க. ஸ்டாலின், அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி மறைந்த தினத்தன்று நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

stalin

கட்சியினர் அனைவரும் தலைவரை இழந்து தவிப்பதாகவும் தான் மட்டும் தலைவர் மட்டுமல்லாமல் தந்தையையும் இழந்து தவிப்பதாகவும் உருக்கத்துடன் பேசியுள்ளார்.

கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே, தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்று உறுதியேற்றிருந்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லையென்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுயுள்ளார்.

"அண்ணாவின் உடலுக்குப் பக்கத்தில் தன்னை வைக்க வேண்டுமென்பது தலைவரின் எண்ணம். அதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டோம். உயிருக்குப் போராடிய கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எங்களிடம் வந்து இவ்வளவு நேரம்தான் அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்லிவிட்டார்கள். முடிந்த அளவு போராடிவிட்டோம் என்றார்கள். பல நண்பர்கள் மூலமாக தலைவரின் விருப்பத்தைச் சொல்லி அனுப்பினோம்.

ஆனால், அவரது ஆசையை நிறைவேற்ற முடியாது என்ற வகையில்தான் அரசின் பதில் இருந்தது. அதற்குப் பிறகு கழகத்தின் முன்னோடி தலைவர்கள் என்னிடம் வந்து, நாங்கள் சென்று கேட்க்கிறோம் . அப்போது அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று தெரிவித்தனர். நானும் வருவதாகச் சொன்னேன். அப்போது அவர்கள் நான் வரக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் வருவதாக வலியுறுத்தினேன். நாங்கள் பிறகு முதல்வரைச் சந்தித்துக் கேட்டோம்.

stalin

அப்போது அவர், விதிமுறைகளின்படி அந்த இடத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறினார். சட்ட ஆலோசனை கேட்டோம். அவர்களும் மறுத்துவிட்டார்கள்" என்றார் ஸ்டாலின்.

மேலும், "சட்ட ஆலோசனை என்பது, அரசு என்ன நினைக்கிறதோ அதைத்தான் அவர்களும் சொல்வார்கள் என்று சொன்னேன். அதனால் ஒப்புதல் தரவேண்டுமென்று மன்றாடினோம். வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம். முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன்.

தலைவருடைய ஆசை, அதை நிறைவேற்றப்பாடுபடுகிறோம் என்று கேட்டேன். அப்போதுகூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. எங்களை அங்கிருந்து அகற்ற, பார்ப்போம் என்று ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். சரியாக ஆறு பத்து அளவில், தலைவர் நம்மை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த இரங்கல் கூட்டத்தில் தான் பேச முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளரும் மு. கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க. அன்பழகன் தெரிவித்துவிட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் உட்பட அந்தக் கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள், உரையாற்றும்போது கண்கலங்கி அழுதனர்.