ரூ.35 கோடி பேரத்தில் கைதாகி... சிறையில் இருந்து வெளிவந்த திருநாவுக்கரசு சொன்ன அடுக்கடுக்கான பகீர் உண்மை...!!!
தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, 37 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது முழுமையாக பேச முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
‘உரிய நேரத்தில் உண்மைகளை வெளியிடுவேன்’
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, வழக்கு தொடர்பாக தற்போது விரிவாக பேசினால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என கூறினார். இருப்பினும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... தவெகவில் விஜயபாஸ்கருக்கு கிடைத்த பதவியால் மோதிக்கொள்ளும் புள்ளிகள்! புதுக்கோட்டையில் கிளம்பிய புதிய கோஷ்டி கணக்கு...!!!
இந்த வழக்கு தனக்கு கிடைத்த ‘நன்றிக்கான பரிசு’ என்று வேதனையுடன் குறிப்பிட்ட அவர், காலம் இதற்கு நிச்சயம் பதில் சொல்லும் என்றும் கூறினார். 37 நாட்கள் சிறையில் இருந்த காலம் மிகவும் கடினமாக இருந்ததாகவும், உணவு கிடைக்காமல் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
‘அரசியல் ஆய்வுக்காகவே இளையராஜாவிடம் பேசினேன்’
தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் தான் பேசியதை ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசு, அந்த தொடர்பு அரசியல் ஆய்வுக்காக தரவுகளை சேகரிக்கும் நோக்கத்திலேயே இருந்ததாக விளக்கமளித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆய்வு மற்றும் கருத்துக்கணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 65 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேகாலயா திட்டம் மற்றும் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தன்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் திருநாவுக்கரசு மறுப்பு தெரிவித்தார்.
விஜய்யுடன் தேர்தல் குறித்து ஆலோசனை
தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்ததாக திருநாவுக்கரசு கூறினார். தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஜான் ஆரோக்கியசாமி, சரண் ரெட்டி உள்ளிட்டோருடனும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைகளுக்காக தாம் எந்தக் கட்டணமும் பெறவில்லை என்றும் திருநாவுக்கரசு கூறினார். இலவசமாக வழங்கிய ஆலோசனைக்கு பதிலாகவே இந்த வழக்கு தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதே நேரத்தில், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது சில தகவல்களை வெளிப்படையாக கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
எனினும், பத்திரிகையாளர் சந்திப்புகளில் இருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை என்று கூறிய திருநாவுக்கரசு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு அனைத்து விவரங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என உறுதியளித்தார். “நீதி நிச்சயமாக வெல்லும்; அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று கூறி தனது பேட்டியை முடித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... தவெகவில் விஜயபாஸ்கருக்கு கிடைத்த பதவியால் மோதிக்கொள்ளும் புள்ளிகள்! புதுக்கோட்டையில் கிளம்பிய புதிய கோஷ்டி கணக்கு...!!!