உங்க குழந்தைங்க இதை செய்றாங்களா.? அப்போ நீங்க கவனமா இருக்கணும்.!
இன்றைய காலத்தில் தொலைக்காட்சி, மொபைல் போன், வீடியோ கேம்கள் போன்றவற்றில் குழந்தைகள் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது, அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பாலும் பெற்றோர் வேலை அல்லது பிசினஸ் என பிஸியாக இருப்பதால், அக்கம்பக்க உறவுகள் குறைந்து விட்டன. இதன் காரணமாக குழந்தைகள் வெளியில் விளையாடும் பழக்கம் இல்லாமல், பெரும்பாலும் வீடுகளில் டிவி அல்லது செல்போன் முன் அமர்ந்தே நேரத்தை செலவிடுகின்றனர். மேலும், வீட்டிற்கு வெளியில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதனால் பெற்றோரும் பிள்ளைகளை வெளியே அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
டிவி பார்ப்பதில் சில நன்மைகளும் இருக்க தான் செய்கின்றன. கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், மொழி அறிவு போன்றவை குழந்தைகளுக்கு பயனாகின்றன.
இதையும் படிங்க: குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கண் மை.! இவ்வளவு ஆபத்தா.? பெற்றோர்களே, உஷார்.!

ஆனால், அதீதமாக டிவி பார்க்கும் பழக்கம், உடல் பருமன், சோம்பேறித்தனம், சர்க்கரை நோய், கண் பிரச்சனைகள், மனச்சோர்வு போன்ற பல தீமைகளையும் உண்டாக்குகிறது.
நீண்ட நேரம் திரைக்கு முன்னால் அமர்ந்து இருப்பது, குழந்தைகளில் கவனமின்மை, கோபம், படிப்பில் பின்தங்குதல் போன்ற நடத்தைக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பெற்றோர்களுடனான உறவிலும் இடைவெளி உருவாகும் ஆபத்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் டிவி பார்ப்பது கண் பார்வையை பெருமளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பெற்றோர் குழந்தைகளுக்கான டிவி நேரத்தை குறைத்து, நல்ல மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து காட்டுவது மிக முக்கியம். அதோடு, குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட ஊக்குவித்து, அக்கம் பக்கத்து பிள்ளைகளுடன் நட்பு வளர்க்க வேண்டும். சரியான வழிகாட்டலுடன், குறைந்த நேரத்தில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பது குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஒரு சிறந்த வழி என்பதை தாண்டி அவர்கள் தவறான பாதைக்கு செல்வதையும் தடுக்கும்.