மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்! பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு
மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்! பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு
இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை நாம் நரேந்திர மோடிக்கு காட்ட வேண்டும் என்று இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளதையடுத்து, அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“இன்றைய இந்தியாவில் எனது பிள்ளைகளின் நிலைமை எதிர்காலத்தில் எப்படி ஆகுமோ என்று நான் கவலைப்படுகிறேன்” என நடிகர் நசிருதீன் ஷா, இந்தியாவில் பசுகாவலர்கள் என்ற பெயரால் நடைபெறும் வன்முறைகள் மற்றும் சகிப்புத்தன்மையின்மை தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த கருத்தை, நேற்று பாக்கிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிய பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இதே கருத்தைதான் பாகிஸ்தான் பிரிவினையின்போது நமது தேசப்பிதா முகமது அலி ஜின்னா கூறியிருந்தார் என தெரிவித்தார்.
இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா தெரிவித்தார். அவர் அப்போது அச்சப்பட்டது போலவே தற்போது அங்கு நடந்து வருகிறது. இதைதான் நசீருதீன் ஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்குள்ள சிறுபான்மை இனத்தவர்களை சம உரிமை பெற்ற மக்களாக மாற்ற மந்திரிகள் உழைக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை நாம் நரேந்திர மோடிக்கு காட்ட வேண்டும் என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.
இவரது இத்தகைய பேச்சு இந்தியர்களிடையே பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து பேசியுள்ள நசிருதீன் ஷா, "எங்களை கவனித்துகொள்ள எங்களுக்கு தெரியும். தனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடுவதற்கு பதிலாக தங்கள் உள்நாட்டு பிரச்சனைகளை இம்ரான் கான் கவனிக்க வேண்டும்" என பேசியுள்ளார்.