சிறுவர்கள் செல்ஃபோன் பயன்படுத்த தடை!.. தீர்மானம் நிறைவேற்றி கட்டுப்பாடு விதித்த கிராம பஞ்சாயத்து..!

சிறுவர்கள் செல்ஃபோன் பயன்படுத்த தடை!.. தீர்மானம் நிறைவேற்றி கட்டுப்பாடு விதித்த கிராம பஞ்சாயத்து..!


gram-panchayat-passed-a-resolution-banning-the-use-of-m

படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவ பருவத்தில், வீடியோ கேம் விளையாடுவதற்காகவும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்காகவும் தற்போது மாணவர்களில் பலர் செல்ஃபோன்களில் மூழ்கியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், அவர்கள் கற்கும் திறன் குறைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இதனை பெற்றோர் கண்டிக்கும் பட்சத்தில் மன உளைச்சல் அடையும் மாணவ-மாணவியர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்டோர் செல்ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கிராம பஞ்சாயத்தில்  இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறியதாவது:-

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தற்போது செல்ஃபோனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களை பயன்படுத்தவும் செல்ஃபோனுக்கு அடிமையாகியுள்ளனர். இதன் காரணமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியர் செல்ஃபோனுக்கு அடிமையாவதை தடுக்க கிராம சபையில் முக்கிய முடிவு எடுத்தோம்.

இதன்படி எங்கள் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்ஃபோன் பயன்படுத்த முடியாது. இதனை செயல்படுத்தும் போது தொடக்க கட்டத்தில் சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.

இதன் பின்பும், இங்குள்ள சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும். அவர்களின் கவனம் மீண்டும் கல்வியில் திரும்பவேண்டும், செல்ஃபோன்களால் அவர்களது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று அவர் கூறினார்.