"ஏர் ஆம்புலன்ஸ் சேவை" பெயரில் மக்களிடம் மோசடி செய்த கும்பல் கைது.. அவசர சேவை என ஆட்பறித்து மோசடி.!

அவசர தேவைக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதாக 12 க்கும் மேற்பட்ட மக்களிடம் மோசடி செய்த கும்பலை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்த மனு அரோரா என்பவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ அவசர தேவைக்காக ஏர் ஆம்புலன்ஸ் சேவை தேவைப்பட்டுள்ளது. இதற்காக இணையத்தில் அவர் தேடுகையில் வந்த குறிப்பிட்ட பக்கத்திற்குள் சென்று, தனது தகவலை தெரிவித்து முன்பதிவு செய்துள்ளார்.
இவர் கவுகாத்தியில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், அதற்கான தொகையாக ரூ.4.72 இலட்சம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் குறிப்பட்ட வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதும், அந்நிறுவனத்தார் என பேசியவர்கள் அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி நவ்தீப் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நவ்தீப் கடந்த 5 வருடமாக 12 க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியது அம்பலமானது.
மேலும், பணத்தை செலுத்திய பின்பு, திடீரென ஏர் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. பணத்தை திரும்ப தர இயலாது என்றும் தெரிவித்து மோசடியை அரங்கேற்றி இருக்கிறார். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக நவ்தீப் சிங்கின் பெற்றோர் பிரதீப் சிங் மற்றும் ஜெக்ரூப் கவூர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி செயலுக்கு திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய குற்றவாளியான நவ்தீப்பின் முன்னாள் காதலி பிரதீப் கவூருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் 2 ஏ.டி.எம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.