மதுபோதையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்! குண்டுகட்டாக தூக்கிய போலிசார்
மதுபோதையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்! குண்டுகட்டாக தூக்கிய போலிசார்

பிகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும்பட்சத்தில், பூர்னியா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் மது அருந்தி வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2016, ஏப்ரல் மாதம் முதலே பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், இதுவரை ஒன்றரை லட்சம் பேர் மது அருந்தியதற்காக அம்மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதாரண மக்களை விடுங்கள், சட்டத்தை நிலை நாட்ட போகிறேன் என்று கூறி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வந்த சுயேட்சை வேட்பாளரே மது அருந்தி விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது அதிகாரிகள் மற்றும் போலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜிவ் குமார் சிங்க்(40) என்பவர் நேற்று பூர்ணியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளார். அவர் அலுவலகத்திற்கு வந்ததிலிருந்தே அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து போலிசார் அவரை விசாரித்ததில், தான் மது அருந்தியுள்ளதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சுவாச கருவியின் மூலம் அவர் மது அருந்தியுள்ளதை போலிசார் உறுதி செய்தனர். பின்னர் அவரை போலிசார் கைது செய்தனர்.