30 கோடி கொடிகள், ரூ.500 கோடியை தாண்டிய வர்த்தகம்: அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு பெருமிதம்..!

30 கோடி கொடிகள், ரூ.500 கோடியை தாண்டிய வர்த்தகம்: அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு பெருமிதம்..!



30-crore-flags-business-crossing-500-crores

புதுடெல்லி, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுவதும், தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியதை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் 'செல்பி' புகைப்படம் எடுத்து 'ஹர் கர் திரங்கா' என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மத்திய கலாசார அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அப்படி பதிவேற்றம் செய்பவர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரியுடன் மத்திய அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பலரும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்தும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மத்திய அரசின் சான்றிதழ் பெற்றனர். பிறகு அந்த சான்றிதழை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நேற்று மாலை வரையில் 6 கோடி செல்பி புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இது ஒரு பிராமண்ட சாதனை என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டதால், சுமார் 30 கோடி தேசிய  கொடிகள் விற்பனையானது என்றும் இதனால், சுமார் ரூ.500 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றும் அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.