கல்விக்கு நிதியுதவி! அதுவும் எவ்வளவு தெரியுமா? அடுத்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா!

கல்விக்கு நிதியுதவி! அதுவும் எவ்வளவு தெரியுமா? அடுத்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா!



surya-announce-donation-for-education

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படம் கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக  அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடி பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்கும் அளிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அதன்  முதற்கட்டமாக 5 கோடியிலிருந்து  1.5 கோடியை நடிகர் சூர்யா திரையுலகினருக்கு அளித்தார்.

அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் மயான பணியாளர்கள் உள்ளிட்டோரின்  குடும்பத்தில் கல்வி பயில்வோருக்கு கல்வி ஊக்க தொகையாக ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளதாக சூர்யா தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் திரையுலகைச் சார்ந்த விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் குடும்பத்தில் பள்ளி, கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு கல்வி கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும். அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அவற்றுடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் பவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் அதற்கான விண்ணப்பத்தை www.agaram.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நடிகர் சூர்யா தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.