பாகிஸ்தானில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் வீடியோ வைரல்...!!
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் வீடியோ வைரல்...!!
பாகிஸ்தானில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்கின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சரிந்து வரும் பொருளாதாரத்தால், பாகிஸ்தான் அரசாங்கம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. அங்கு நிலவும் பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு உற்பத்தி போதிய அளவு இல்லாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு சமயல் எரிவாயு விலையும் அதிகரித்து வருகிறது. எனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் வினியோகத்தை குறைத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு நிரப்பி செல்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கியாஸ் விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள் என்றும் மூன்று அல்லது நான்கு கிலோ கியாஸ் நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி சென்று அதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்வது கையில் வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம் என்றும், இதனால் மிகவும் மோசமான விபத்துகள் நிகழும் அபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிளாஸ்டிக் பைகளால் காயமடைந்து எட்டு பேர் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.