நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
அதிர்ச்சி... மீண்டும் நிலச்சரிவால் தடுப்புகள் உடைந்து சீறிப்பாய்ந்த வெள்ளநீர்! அலைக்கழியும் 1500 உயிர்கள்... திபெத் எல்லை பகுதியில் அடுத்த பேரதிர்ச்சி! சற்றுமுன் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை....!!!
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசுவா மாவட்டத்தில் பாட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதில் 469 பேர் உயிரிழந்ததாகவும், 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, திபெத் பகுதியில் மீண்டும் நீர்த்தடுப்பு உடைந்ததாக தகவல் வெளியானதால், ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளுக்கு நேபாள அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலச்சரிவால் உருவான தடுப்புகள் உடைந்து பேரழிவு
மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான தற்காலிக நீர்த்தடுப்புகள் உடைந்ததைத் தொடர்ந்து, பாறைகள், சேறு மற்றும் இடிபாடுகளுடன் வெள்ளநீர் சீறிப்பாய்ந்தது. பாட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்த வெள்ளம், வழியிலிருந்த கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளை கடுமையாக சேதப்படுத்தியது.
இதனால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேறும் குப்பைகளும் பல அடி உயரத்துக்கு குவிந்துள்ளதால், பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதே மீட்புக் குழுக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
மீண்டும் வெள்ள அபாயம்; மக்கள் வெளியேற உத்தரவு
திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தடுப்பு உடைந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான மண்டலங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
பாட்டேகோஷி ஆற்றின் தற்போதைய நிலவரத்தை கண்காணித்து, பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்ய நேபாள அரசு சிறப்பு குழுவை அனுப்பியுள்ளது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு மத்தியில் புதிய வெள்ள அபாயம் உருவாகியிருப்பது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
3,253 பேர் மீட்பு; சுரங்கங்களில் சிக்கியவர்களை தேடும் பணி
முன்னதாக, திபெத் பகுதியில் நிலச்சரிவால் உருவான புதிய இயற்கை ஏரியில் சுமார் 20 லட்சம் கனமீட்டர் நீர் தேங்கியிருப்பதாக சீனா எச்சரித்திருந்தது. நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் தடுப்பு உடைந்து நேபாளப் பகுதிகளில் மீண்டும் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அச்சம் நிலவியது.
இந்நிலையில், நேபாள ராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 3,253 பேர் மீட்பு செய்யப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதை நுழைவுவாயில்கள் சேற்றால் அடைபட்டுள்ளதால், அவற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மனுஷங்களா நீங்களாம்.? வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் காதிலிருந்து கழட்டிய தோடு, தங்க நகைகள்! கொடூர வீடியோ...!!!