திருமணமான 6 வாரத்தில் இளம் பெண் மர்ம மரணம்: விசாரணை வளையத்தில் சிக்கிய காதலன் குடும்பம்..!

திருமணமான 6 வாரத்தில் இளம் பெண் மர்ம மரணம்: விசாரணை வளையத்தில் சிக்கிய காதலன் குடும்பம்..!



young-lady-mystery-death-with-in-6-weeks-after-marriage

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஆர்.சி.வடக்குத் தெருவை சேர்ந்த சவரிமுத்து என்பவரது மகன் வினித் ( 24). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள காஞ்சம்பட்டியை சேர்ந்த சத்யா (21). சத்யாவின் வீட்டின் அருகே வினித் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இருவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் வினித்-சத்யா திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர், உத்தமபாளையத்தில் வினித்தின் பெற்றோருடன் வினித்-சத்யா ஜோடியினர் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை வினித் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, சத்யா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் இருந்துள்ளார். இதற்கிடையில், சத்யா திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி உறவினர்கள் அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மகள் இறந்தது குறித்து சத்யாவின் தாய் குஞ்சம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருமணமான 6 வாரங்களில் சத்யா உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.