வீரமரணமடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நிதி மற்றும் அரசு பணி ஆணையை அளித்த து.முதல்வர்!

வீரமரணமடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நிதி மற்றும் அரசு பணி ஆணையை அளித்த து.முதல்வர்!



tn-govt-offers-money-and-job-to-jawan-family

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

Kashmir attack

சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதனை தொடர்ந்து இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ.20லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும், சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையையும் துணை முதல்வர் வழங்கினார்.