மின்னிணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி.. திருப்பூரில் பதைபதைப்பு சம்பவம்.!
மின்னிணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி.. திருப்பூரில் பதைபதைப்பு சம்பவம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம், அரசமரத்து புதூரில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது 73). இவர் விவசாயி ஆவார். இவரின் மனைவி ஜானகி (வயது 63). இவர்களின் மகன் சிவகுமார் (வயது 33). இவர் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். சிவகுமாருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களின் வீட்டருகே வேறு வீடு இல்லாத காரணத்தால், வீட்டில் சி.சி.டி.வி கேமிரா உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வீட்டில் ஜானகி மற்றும் அவரின் மகன் சிவகுமார் இருந்துள்ளனர். அப்போது, வீட்டின் விளக்குகள் திடீரென அணைந்த நிலையில், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது பிற வீடுகளில் மின்விளக்கு எரிந்துள்ளது.
இதனால் வீட்டின் பின்புறத்தில் உள்ள மீட்டரை காண சிவகுமார் சென்ற போது, அங்கு பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். நிலைகுலைந்த சிவகுமார் அபயக்குரலிடவே, அங்கு வந்த ஜானகியின் கழுத்தில் அரிவாளை வைத்து வீட்டில் இருந்த நகை, பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். சுதாரித்த ஜானகி வீட்டிற்குள் சென்று கதவை சாற்றி, செல்போன் மூலமாக அருகே இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைகவனித்து ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தும் பலனில்லை. இதற்குள்ளாக அக்கம் பக்கத்தினர் வந்துவிட்டதால், கொள்ளை கும்பல் தப்பி சென்றுள்ளது. காயமடைந்து கிடந்த சிவகுமாரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.