திருவள்ளுர் அருகே, ஆசிரமத்தில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. விஷம் குடித்து தற்கொலை..! தமிழகமே அதிர்ச்சி.!!

திருவள்ளுர் அருகே, ஆசிரமத்தில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. விஷம் குடித்து தற்கொலை..! தமிழகமே அதிர்ச்சி.!!



thiruvallur-college-girl-hemamalini-suicide-drinks-pois

பூண்டி அருகே செயல்பட்டு வரும் ஆசிரமத்தில், 20 வயதுடைய கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, வெள்ளத்துக்கோட்டை பகுதியில் ஆசிரமம் வைத்திருப்பவர் முனுசாமி. இவர் பூஜை செய்து, மூலிகை சாறுகளை கொடுத்து நாள்பட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரிடம், தீராத வயிற்று வலி மற்றும் கழுத்து வலியுடன் 20 வயதுடைய கல்லூரி மாணவி ஹேமமாலினி என்பவர் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார். 

கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறேன் என முனுசாமி மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடமாக மாணவி ஆசிரமத்திலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணையவழி வகுப்புகள் நடந்ததால் ஆசிரமத்திலேயே சிகிச்சை நடைபெற்றுள்ளது. 

மாணவியுடன் அவரது அத்தை பாதுகாப்புக்காக தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மாணவிக்கு முனுசாமி கஷாயம் வழங்கியதாக தெரியவருகிறது. இதனைக்குடித்த மாணவி சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க, பதறிப்போன அத்தை முனுசாமியிடம் தகவலை கூறி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுகோள் வைத்துள்ளார். 

thiruvallur

ஆனால், முனுசாமியோ பொறுமையாக ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், கல்லூரி மாணவி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது, மாணவி பூச்சி மருந்தை குடித்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி ஹேமமாலினியும் உயிரிழந்துவிடவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். மேலும், தலைமறைவான முனுசாமிக்கும் அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். 

thiruvallur

பெற்றோர்கள் அளித்த புகாரில், "கடந்த 2020 ஆம் வருடம் மகளின் உடல்நலக்குறைவால் அவரை ஆசிரமத்தில் அனுமதி செய்தோம். அவருக்கு ஆசிரமத்தில் வைத்து தான் சிகிச்சை அளிப்பேன் என்று முனுசாமி தெரிவித்தார். மகளின் உடல்நிலை சரியாகவும், அவருக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகிறது என்பதாலும் நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம். 

சமீபத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், மகளை அழைத்துச்செல்ல நாங்கள் முற்பட்ட போது, பல காரணத்தை கூறி மகளை அனுப்ப மறுப்பு தெரிவித்தார். மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் கூறி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பூஜை செய்வார். நள்ளிரவில் மகளை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைப்பார்" என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.