கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர் புற சாலைக்கு பறந்த கார்: கோர விபத்தில் டிரைவர் பலி 4 பேர் படுகாயம்..!

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர் புற சாலைக்கு பறந்த கார்: கோர விபத்தில் டிரைவர் பலி 4 பேர் படுகாயம்..!



the-driver-lost-control-of-the-car-and-hit-the-barricad

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நிஹால் அகமது (30). இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருடன், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பெரம்பலூருக்கு அதே காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துரவங்குறிச்சி பகுதியை அடுத்த செவந்தாம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியதில் எதிர்பக்க சாலையில் விழுந்து உருண்டது.

இந்த கோர விபத்தில், காரை ஓட்டி வந்த நிஹால்அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த காரில் பயணம் செய்த பெரம்பலூரை சேர்ந்த சாதிக் பாட்சா (48), சாதிக் பாட்சாவின் மனைவி சம்சுஹிதா (42), கடலூர் மாவட்டம், வாகையூர் பகுதியை சேர்ந்த தமிழரசி (32) மற்றும் கடலூர் மாவட்டம் அரங்கூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(47) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். விபத்து குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதைநையடுத்து அவர்களை தீயணைப்பு வாகனத்திலேயே துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து, சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துவரங்குறிச்சி காவல்துறையினர் உயிரிழந்த நிஹால் அகமதின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.