முன்விரோதத்தில் பூ வியாபாரி படுகொலை; நடுரோட்டில் துள்ளத்துடிக்க பயங்கரம்.. சிதறி ஓடிய பொதுமக்கள்.!



Thanjavur Pattukottai Man Killed in Public Place 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவில் வசித்து வருபவர் காத்தாடி ராஜா (வயது  52). பட்டுக்கோட்டை பெரிய தெருவில் இருக்கும் தனியார் வங்கி அருகே, சொந்தமாக பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

ராஜாவுக்கு மனைவி, மகள் இருக்கின்றனர். அங்குள்ள காவல் நிலையத்தில் ராஜாவின் மீது பல வழக்குகளும் உள்ளன. ராஜாவுக்கும் - அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 37), வீரமணி (வயது 27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதமானது இருந்து வந்துள்ளது.

நேற்று காலை நேரத்தில் ராஜா தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நின்றுகொண்டு இருந்தார். பொதுமக்கள் பரபரப்பாக தங்களின் பணிகளை கவனித்துக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் அங்கு வந்த கார்த்திக், வீரமணி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

வாக்குவாதம் முற்றியபோது இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். இதனைக்கண்ட பொதுமக்கள் அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணி, கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த கொலை சம்பவம் மக்களை பதறவைத்தது.