கொலையின் விலை 100 ரூபாய்: தரம் கெட்டுப் போகும் தமிழகம்!. போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்..!

கொலையின் விலை 100 ரூபாய்: தரம் கெட்டுப் போகும் தமிழகம்!. போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்..!



tamil-nadu-where-the-cost-of-a-murder-is-rs-100-will-de

சென்னை, வேளச்சேரி அருகேயுள்ள தண்டீஸ்வரம் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஒரு குடியிருப்பில் திருவண்ணாமலை பகுதியை  சேர்ந்த ஆனந்தன் (22), சக்திவேல் (25), பிரசாந்த் (23) மற்றும் சீனிவாசன் (25) ஆகியோர் அந்த குடியிருப்பில் தங்கி இருந்து பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் 3 வது மாடியில் இருந்து ஆனந்தன் குடிபோதையில் கீழே தவறி விழுந்ததாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல்துறையினர், ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆனந்தனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனந்தன், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக மூவரும் ஒரே பதிலை கூறியுள்ளனர். எப்படி விசாரித்தாலும் ஒரே பதிலை பதற்றம் இல்லாமல் கூறி வந்த நிலையில், அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில், சீனிவாசன் வேறு ஒரு குடியிருப்பிலும் மற்ற 2 பேரும் ஆனந்தனுடன் ஒரே இடத்திலும் வேலை செய்தது தெரியவந்தது. மேலும் ஆனந்தன் அதிகப்படியான வேலை செய்து வந்ததால் கட்டிட மேஸ்திரி அவருக்கு 100 ரூபாய் கூடுதலாக கூலி கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும், ஆனந்தனிடம், உன்னால் நாங்கள் இருவரும் அவமானபடுத்தப்படுகிறோம், நீயும் பொறுமையாக வேலை செய் என்று கூறியுள்ளனர்.

இதன் பின்னரும் ஆனந்தன் எப்போதும் போல வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பிரசாந்த் இருவரும் சேர்ந்து ஆனந்தனை சீனிவாசன் வேலை செய்யும் கட்டிடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்கள் 4 பேரும் அந்த கட்டிடத்தின் 3வது மாடியில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தினர். இதன் பின்னர் போதையில் தள்ளாடிய ஆனந்தனை, மூவரும் சேர்ந்து  கீழே தள்ளிவிட்டனர்.

3 மாடிகள் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஆனந்தன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடி ஆனந்தனை மருத்துவமனையில் அனுமதித்ததும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய வேளச்சேரி காவல்துறையினர், சக்திவேல், பிரசாந்த் மற்றும்  சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.